வாழ்க்கை

Thursday, February 08, 2007

நம்முடய ஜீவித குறிக்கோள் என்ன?


எல்லோரும் உலகில் வாழ்வதற்காகவே ஜனித்திருக்கிறோம். இது கூடத் தெரியாதா என்ன? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் வாழ்வு என்பது என்ன? நம் ஐம்புலன்கள் உலகிலிருந்து வரும் விஷயங்களை உட்கொண்டு அதற்கேற்ப இயங்குகின்றன. நாம் உண்ணும் உணவுப் பொருட்களின் தன்மயைப் பொறுத்து நம் இயக்கம் உள்ளது. ஸாத்வீக உணவுப் பொருட்களை உட்கொள்வோமானால் நம் இயக்கம் ஸாத்வீகமாக இருக்கும். ராஜஸீக உணவு உட்கொண்டால் நம் இயக்கமும் ராஜஸீகமாக இருக்கும். தாமஸீக உணவு மந்த புத்தியுடன் நம்மை இயங்க வைக்கும். காரணம் நம்முள் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பொழுது நாம் ஒவ்வொரு விதமாக இயங்குகிறோம். எதனால்? இம்மூன்று குணங்களின் சேர்க்கை வீதத்தைப் பொறுத்திருக்கிறது நம் இயக்கத்தின் தன்மை.

இம்மூன்று குணங்கள் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் தன்மையை ஒட்டியுள்ளது. எதற்காக உண்ணுகிறோம்? உயிர் வாழ்வதற்காக அல்லவா? ஆனால் சிலர் உண்ணுவதற்காகவே வாழ்கிறார்கள். உணவு மட்டும்தான் நம் வாழ்வின் நோக்கமா? அல்ல. பின் நம் வாழ்வின் குறிக்கோள் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எப்படி வந்தோம்? எதற்காக வந்தோம் என்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். விடை கிடைக்கிறதா? அம்மாவின் உதரத்திலிருந்து வந்தோம். உதரத்தில் கருவாக வந்து வளர்ந்து முழு வளர்ச்சியான பிறகு கர்ப்பப் பை வழியாக வெளி வந்தோம். உயிர் வாழ்வாதற்காக வந்தோம். இதுதானே உண்மை? தவறு. கரு எங்கிருந்து உருவானது? எதற்காக உருவானது? எனபன போன்ற வினாக்களுக்கு விடை காண வேண்டும். உடல் மூலமாக உலகில் இயங்குகிறோம். உயிர் உள்ளதால் வாழ்கின்றோம். உயிர் நிலைத்து நிற்க உணவு உட்கொள்கிறோம். ஆனால் உயிர் என்பது என்ன? எங்கிருக்கிறது? எங்கிருந்து வந்தது? விடை காண இயலாத ஒரு வினா.

உள்நோக்கி நம் கவனத்தைத் திருப்பினால் விடை கிடைக்கும். நம்மை நம்முள் இருந்து இயக்குவது யார்? நான் யார்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காண வேண்டும். நான் உடலா? அல்லது மனமா? அல்லது புத்தியா? அல்ல. அஹம் என்ற நினைவா? அல்ல. பின் நான் என்பதின் பொருள் என்ன? இப்படி பகவான் ரமண மஹாரிஷி தந்துள்ள ஆத்ம விசாரத்தைக் கையாண்டால் விடை கிடைக்கும். ஆனால் இதை ஒரு வினாவாகக் கையாளக் கூடாது. ஒரு சாதனையாகக் கொள்ள வேண்டும். எப்படி?

0 Comments:

Post a Comment

<< Home